articles

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதை வாக்கு வங்கி அரசியல் அல்ல - வர்க்க அரசியல் அருந்ததியர் உரிமை மாநாட்டில் பி. சம்பத் முழக்கம்

அருந்ததியர் உரிமை வெற்றிவிழா மாநாடு ஆட்ட பாட்டங்களோடும், கலை நிகழ்ச்சிகளோடும் எழுச்சியாக நடக்கிறது.  தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளாக அம லாகி வரும் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம் அம்மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை யில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. கால் நூற்றாண்டு காலம் அருந்ததி யர் மக்கள் உள் ஒதுக்கீடு கோரி  போராடி வந்த போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தலையீட்டிற்கும் பிறகே இப்பிரச்சனை பொதுவெளியிலும் அரசின் கவனத்தையும் ஈர்த்தது.

உடைமையற்ற உழைப்பாளிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை இப்பிரச்சனையை வாக்கு வங்கி அடிப்படையிலோ, சுய நலன் அடிப்படையிலோ அணுகவில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தோடு தான் அணுகி வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி வர்க்க கட்சி. தலித்துகளும் குறிப்பாக அருந்ததியர்களும் சாதி அடிப்படையில் மிகவும்  ஒடுக்கப்பட்ட பாட்டாளிகளாவார்கள். ஆம், தலித் மக்களில் 95 சதம் பேர் உடைமையற்ற உழைப்பாளிகள் ஆவர். இவர்களை அணி திரட்டா மல் பாட்டாளி வர்க்க ஒற்றுமை சாத்தியமல்ல. தலித் - அருந்ததியர் மக்களுக்காக தலித் அல்லாத  இதர உழைப்பாளி மக்களையும் திரட்டி வரும் இயக்கம் செங்கொடி இயக்கம். தலித் அல்லாத உழைப்பாளிகளிடையே சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு கருத்துக்களை பரப்பி அவர்களையும் தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங் களில் இணைக்கிற இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். அருந்ததியர் உள்ஒதுக்கீடு உரிமைக் கான போராட்டத்தில் இப்பாதையில் செயல்பட்டதாலேயே பரந்து பட்ட ஜனநாயக சக்தி கள் மற்றும் மாநில அரசின் கவனத்தை இப்பிரச்ச னை ஈர்த்து வெற்றி சாத்தியமானது. கலைஞர் தலைமையிலான அன்றைய திமுக அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு கண்டதானது வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களையும் இப்பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உணர்வுகளை யும் அரசுக்கு வெளிப்படுத்த வைத்ததானது ஒரு நெகிழ்வான நிகழ்வாகும்.

மாநில உரிமை

தலித் மக்களை அவர்களின் பொருளாதார நிலை அடிப்படையில் வகைப்படுத்த (sub classification) மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சரியான அணுகுமுறை. ஆயினும் சில இயக்கங்களும், தலைவர்களும் இதனை ஆட்சேபிக்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் தலித் மக்கள் பல்வேறு உப பிரிவுகளாக உள்ளனர். இவர்களை அவர்களின் பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் தான் வகைப்படுத்த முடியும். ஒன்றிய அரசுக்கு இது சாத்தியமல்ல. எனவேதான் இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. மாநில அரசுக்கு இந்த உரிமை உத்தரவாதப்படுத்தப்படவில்லை எனில்  தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சாத்தியமாகியிருக்காது.


அருந்ததியர் உள்ஒதுக்கீடு தலித் மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துவதாக சிலர் வாதிடு கிறார்கள். ஆனால் உண்மை என்ன? தலித் மக்களிடையே உள்ள உட்பிரிவுகளும் அதில் உள்ள சில பிரிவினர் அவர்களுக்குள்ளேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதும்தானே இன்றைய நிலையில் அவர்களின் ஒற்றுமை யை பாதித்துள்ளது? இவ்வாறு மிகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்குரிய சட்டப்பூர்வ உரிமை யை வழங்குவதன் மூலமும், அவர்களை மேம்படுத்துவதன் மூலமுமே இந்தியச் சாதியமைப்பின் அடித்தட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித் மக்களையும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுபடுத்த முடியும்.

நவீன தாராளமயத்தை  ஏன் எதிர்க்க வேண்டும்?

அடுத்து, இடஒதுக்கீடு உட்பட சமூக உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளின் கவனத்திற்கு சில அம்சங்களை கொண்டு வர விரும்புகிறேன். இன்று ஒன்றிய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் தாராளமய, தனியார்மய கொள்கைகளால் அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் லட்சக்கணக்கான பதவிகள் பறி போகின்றன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இட ஒதுக்கீடு பெறவும் அதனை பாதுகாக்கவும் போராடி வரும் தலித் மற்றும் சமூக உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் இத்தகைய தாராள மய, தனியார்மய கொள்கைகளை போதுமான  அளவு எதிர்த்து போராட முன்வராதது வருத்த மளிப்பதாக உள்ளது. இடஒதுக்கீடை பாதுகாக்க வும், பலப்படுத்தவும் இக்கொள்கைகளை முறி யடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல, இக்கொள்கை களுக்கு எதிரான போராட்டத்திலும் இடதுசாரி களுடன் இணைந்து போராட முன்வருமாறு இந்த அமைப்புகளை கேட்டுக் கொள்கிறேன்.

இணைந்த போராட்டங்கள்

அடுத்து, தலித் மக்களில் கணிசமானவர்கள் உடைமையற்றவர்கள். இவர்களுக்கும் நிலமற்ற இதர ஏழைகளுக்கும் நிலம் வழங்க வேண்டுமென கம்யூனிஸ்ட் இயக்கம் போராடி வருகிறது. அடுத்து கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் பரவலாக தனியார்மயமாகி அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. இந்த உரிமைகள் பாதுகாக்கப்படு வதும் இதோடு உணவு, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை உத்தரவாதப்படுத்துவதும் அடித்தட்டு மக்களின் சமூக அந்தஸ்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, சமூக உரிமைகளுக்கான போராட்டத் தை நடத்தும்போது இதனை உத்தரவாதப்படுத்த வகை செய்யும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தையும் இணைத்து நடத்த முன்வருமாறு அனைத்து தலித் அமைப்பு களையும், சமூக உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, தலித் - பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தில் செங்கொடி இயக்கம் என்றென்றும் உறுதியாக நிற்கும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே  இடமில்லை என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 29 - திண்டுக்கல்லில் நடைபெற்ற அருந்ததியர் உள்ஒதுக்கீடு வெற்றிவிழா மாநாட்டில் ஆற்றிய உரையின் அம்சங்கள்

அருந்ததியர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம்
கு.ஜக்கையன்
தலைவர், ஆதித்தமிழர் கட்சி 

இந்த சட்டத்தால் 56 அருந்ததிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு தேர்வு பெற்றார்கள். 2008ல் பொறியியற் கல்லூரிகளில் 125 சீட்டுக்கள் தான் கிடைத்தது; இந்த சட்டத்திற்கு பிறகு 1150 பேருக்கு சீட் கிடைத்தது. சட்டக்கல்லூரிகளில் 7 பேர் தான் சென்றுகொண்டிருந்தார்கள்; இப்போது ஆண்டுக்கு 70 பேர் வழக்கறிஞர்களாக வருகிறார்கள். கல்வியில் மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றத்திற்கான அடிப்படை விதையை போட்டது; ஒடுக்கப்பட்ட மக்களில் கடைக்கோடி மக்களின் மாணவ, மாணவியர்களும் படிக்க வேண்டும்; மலம் அள்ளுகிற மக்களின் மகன்களும், மகள்களும் மலம் அள்ளும் தொழிலைத்தான் செய்ய வேண்டுமா? ஒரு மருத்துவராக ஆக முடியாதா? செருப்பு தைக்கிறவர் மகன் வீதிகளில் செருப்பணிந்து நடக்க முடியாதா? என்ற கேள்விகளை எழுப்பிய சமூக நீதி தான் இந்த உள் இடஒதுக்கீடு. இந்த கோரிக்கையை முதல்வர் கலைஞரிடம் எடுத்துச்சென்ற பெருமை சிபிஎம் தலைவர் என். வரதராஜனைச் சாரும். அவரும் இன்றைக்கு உயிருடன் இல்லை. இதை சட்டமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரும் உயிருடன் இல்லை. ஆனால் அவர்கள் பெற்றுத் தந்த இந்த உள் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி இந்த சமூக மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இந்து என்ற பாட்டிலுக்குள் அடைக்கப்பட்ட சாதிகள்
கே.பாலபாரதி
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் 

நமது மிகப்பெரிய வில்லன் பாஜக. வர்ணாசிரம முறை அப்படியே தொடர வேண்டும் என்கிறது. இந்தியாவில் எல்லா மாற்றங்களும் வரும். ஆனால் வர்ணாசிரம முறையில் எந்த மாற்றமும் வராது. சனாதன அமைப்புகள் தொடர வேண்டும். ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து வைத்துக்கொண்டு அதில் தேவேந்திர குல வேளாளரைப் போடு; ஆதிதிராவிடரை உள்ளே போடு. அருந்ததியரையும் தூக்கி உள்ளே போடு அந்த பாட்டிலை மூடி சீல் வைத்து இவர்கள் ‘இந்துக்கள்’ என்று எழுதி ஒட்டுகிறது பாஜக. இது மாய்மாலம். பாஜக சாதியை ஒழிக்காது. அதில் உள்ள வேற்றுமைகளை ஒழிக்காது. அரசியலில் பாஜக வகுப்பு வாதத்தை முன் வைக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் மதவெறிக்கருத்துக்களை புகுத்துகிறது. அதற்கெதிரான போராட்டத்தையும், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. நமக்கு தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமையின் மூலம் நாம் பெற்ற உள் இடஒதுக்கீட்டை பாதுகாப்போம். 

வேலை வாய்ப்பு... இன்னும் குதிரைக் கொம்பே!
இரா.அதியமான், 
தலைவர், ஆதித்தமிழர் பேரவை

பாஜக அரசு கொரோனா காலத்தில் ரோகினி கமிசன் அமைத்தது. அந்த அறிக்கை ஒன்றிய அரசிடம் கிடப்பில் உள்ளது. அந்தந்த மாநிலங்களில் சாதிகளை வகைப்பாடு செய்யுங்கள் என்று பரிந்துரைத்திருக்கிறது. இந்த தீர்ப்பு வந்த பிறகு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தீர்ப்பை அமுல்படுத்த துவங்கிவிட்டார்கள். 6 மாதத்தில் இதன் பலன் அவர்களுக்கு கிடைத்துவிடும். 

இதே போல் 56 ஆண்டுகளுக்கு முன்பு லோகூர் கமிசன் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

அருந்ததியர்கள் வந்தேறிகள்; இவர்களுக்கு எப்படி உள்இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று நெல்லையில் நடைபெற்ற எஸ்.சி.எஸ்டி. அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்கள். இந்த கண்ணோட்டம் பலரிடம் இருக்கிறது. எங்களுக்கு இந்த தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த வரலாறு இருக்கிறது. அரசியல் வாதிகளும் பேசுகிறார்கள். உள் இடஒதுக்கீட்டில்  அருந்ததியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்ததாக அப்பட்டமான பொய் விளம்பரங்கள்.பாரதியார் பல்கலைக்கழகத்தில் 29 உதவி பேராசிரியர் பதவிகளும் அருந்ததியர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. நேராகச் சென்று விசாரித்த போது  ஒரு ஆள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விளம்பரம் வருகிறது. பின்னர் மடைமாற்றி வேறு சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அருந்ததியர்கள் எத்தனை பேர் 2008க்கு பிறகு அரசு பதவியில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். 

இரட்டைக்குழல் துப்பாக்கிகள்
நாகை திருவள்ளுவன்
தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

இந்த தீர்ப்புக்கு எதிரான கருத்துக்கள் வருகின்றன. நமது தோழர்கள் அச்சமடைந்தார்கள். நான் நிதானமாக சொன்னேன். இந்தஉள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. இடஒதுக்கீட்டை சட்டமாக்கிய திமுக இருக்கிறது. இடதுசாரிகளும்,பெரியாரிஸ்ட்டுக்களும், திமுகவும் இருக்கிற வரை இந்த இடஒதுக்கீட்டில் யாராலும் கை வைக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிற வரை இந்த உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். அருந்ததியர் அமைப்புகள் இல்லாத இடங்களில் கூட தீண்டாமை ஒழிப்பு முன்னணி களமிறங்கி நமக்காக குரல் கொடுக்கிறது.  அரசியல் போர்க்குரலாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிகள் இருக்கிற வரை அருந்ததியர் மக்களை பாதுகாக்க ஒரு போதும் தவறாது. 

அருந்ததியர்கள் அசல் பாட்டாளிகள்
கே.சாமுவேல் ராஜ் 
பொதுச்செயலாளர், தீஓமு

அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோரிக்கை அல்ல. சொந்தமாக உருவாக்கி அதனை நிறைவேற்ற தொடர்ந்து போராட்டங்களை சிபிஎம் நடத்தியது. 2003ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் தோழர் என்.சங்கரய்யா கலந்து கொண்ட தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை சிபிஎம் சார்பாக  நடத்தினோம். தீண்டாமை என்ற உஷ்ணத்தில் வெந்து கொண்டிருந்த அருந்ததியர் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரத்தழுவிக்கொண்டார்கள். 

எங்களுக்கு பெரும் வரவேற்பு.  அன்றைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டில் பல பகுதிகளில் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை சிபிஎம் நடத்தியது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுக்கிற கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சாதியின் பெயரால் மாநாட்டை நடத்த முடியுமா என்று ஆராய்ந்தோம். அகில இந்திய தலைமையும்  வழிகாட்டியது. அருந்ததியர் மக்கள் சாதி அல்ல; அவர்கள் அசல் பாட்டாளி வர்க்கத்தினர் என்று எங்களுக்கு தெளிவுபடுத்தியது. அதன் அடிப்படையில் 2007ம் ஆண்டு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் மாநாடு நடத்தினோம். உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு ஆபத்து சூழ்ந்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஆபத்தை நாம் எதிர்கொள்ள முடியும். 

அருந்ததிய மக்களின் முன்னாள் செல்கிற ஒரு படைத்தளபதியை போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும். இந்த ஒதுக்கீடு குறித்து யாரும் கேள்வி எழுப்பாதீர்கள். அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்கு நல்லதல்ல என்பதை எடுத்துரைப்பதற்காகத்தான  இந்த மாநாடு.